முன்னுரை:
"வள்ளுவனே உலகிற்குத் தந்து, வான்புகழ் பெற்ற தமிழ்நாடு" என்றார் பாரதி. திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று உறுதிப் பொருட்களையும் விரிவாக 133 அதிகாரங்களையும் 1330 குறட்பாக்களை உடையது. இந்நூலில் மனித இனம் முழுமைக்கும் வேண்டிய உரிய கருத்துக்களை எடுத்துக் கூறுவதாக அமைந்த இந்நூலில், 'அன்பின் ஆளுமை'யை விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
ஆளுமை:
ஒவ்வொரு மனிதனிடமும் குறிப்பிட்ட வகையில் அவனது உடல் மனப்பான்மைகள் சேர்ந்து ஒருங்கிணைந்து இருக்கும். இவ்வாறு இருக்கும் ஒருங்கமைப்பின் இயல்பு, மனிதனுக்கு மனிதன் சிறிதேனும் மாறுபட்டிருக்கும். தனிமனிதன் ஒருவன் தன் சூழ்நிலையில் எவ்வாறு செயல்படுகின்றன என்பது ஒருங்கமைப்பின் தன்மையைப் பொறுத்தது ஆகும். இத்தகைய உடல் மனப்பண்புகளின் தனிப்பட்ட ஒருங்கமைப்பு ஒருவனது ஆளுமையையும் என்கிறார் வள்ளுவர்.
அன்பு:
காலத்தின் பொருளையும் பிறருக்குத் தேவைப்படும் போது கொடுக்கும் தன்மையே அன்பின் அடிப்படை. இது அகத்தே உணரும் மென்மையான உணர்வு இதற்கு புறவடிவம் இல்லை, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது, உருவம் இல்லாத உணர்வு, இவ்வுலகில் பிறவி எடுத்ததன் பயன் வாழ்வாங்கு வாழ்ந்து உடலும் உயிரும் சிறப்படைவது அன்பினாலே.
திருக்குறள் போற்றும் அன்பு நெறி:
இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், பெண்வழிச் சேறல் முதலிய அனைத்திற்கும் உயிர்நாடியாக விளங்குவது அன்பு.
அன்பின் வெளிப்பாடு:
அன்பை இன்பத்திலும் துன்பத்திலும் காணலாம், பிறரது கண்ணின் மூலமும் காணலாம், பிறரது முகம் மலர்ச்சியுளும் செய்கையிலும் பார்க்க இயலும். அன்பை தனித்து காண முடியாது, அன்பை அமைத்து வைக்கவும் முடியாது என்பதனை,
"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்"
என்ற குறட்பா அன்பின் வெளிப்பாடினை உணர்த்துகிறது.
மனித வாழ்வு:
உலகத்தில் உள்ள எல்லா உயிர்களிடமும் அன்பு காணப்படுகிறது. அன்பானது ஒரு மனிதனை மற்ற மனிதர்களோடு இச்சமுதாயத்தில் சேர்ந்து வாழ வழிசெய்கிறது. வள்ளுவர் அன்பினை குறித்துக் கூறும் போது அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரியதாகக் கொள்வர் ஆனால் அன்பு உடையவரோ தன் உடலையும் பிறருக்கு வழங்கக் கூடியவர் என்பதனை,
"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு"
என்ற குறட்பா வாயிலாக எடுத்துக் காட்டுகின்றார்.
அறத்திற்கு மட்டுமே அன்பு துணை புரியும் என்று அறியாதவர்கள் சொல்வார்கள், அறத்திற்கு மட்டுமின்றி நாடு, மொழி, கொள்கை காக்கும் மறம் சார்ந்த போருக்கு அன்புதான் துணைபுரிகின்றது என்பதனை,
"அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை"
என்ற குறட்பா வாயிலாக குறிப்பிடுகின்றார்.
காதல்:
"உடம்போடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு"
காதலன் தன் காதலியின் மீது உயிருக்குச் சமமாக அன்பு வைத்திருக்கின்றான்.
மேலும்,
"கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடத்து"
என்ற குறளில் காதலியின் மீது கொண்ட அன்பின் மிகுதியால் நீ எனை விட்டு சென்றால் என் உயிர் பிரியும் என காதலன் கூறுகின்றான். மேலும் காதலி காதலனை நினைத்து கொண்டு இருக்கின்றாள். காதலியின் கண்ணில் காதலன் உள்ளே போகாமல் விழிகளுக்கும் இமைகளுக்கும் இடையில்ல இருந்து கொண்டு இருக்கின்றான் என்றால் காதலின் மீதான அன்பையே வெளிக்காட்டுகிறது. கண்ணை மூடினால் என் காதலன் மறைந்து விடுவார் என்றும் காதலி சூடான உணவுகளை உண்ண அஞ்சுவதும் காதல் மீதான அன்பை மேற்கண்ட குறட்பாக்கள் வெளிப்படுத்துகிறது.
இல்வாழ்க்கையில் அன்பு:
இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரும் ஒருவருடன் ஒருவர் மிக அன்பாக இருக்கவேண்டும் என குறிப்பிடும் வள்ளுவர், எதைச் செய்தாலும் அன்போடும் தரும நியாயம் தவறாமல் செய்தால் அதுதான் இல்வாழ்க்கையின் தன்மை, அதனால் நமக்கும் உலகத்துக்கும் நல்ல பயன் உண்டாகும் என்பதை,
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"
இனிமை, நீர்மை எனும் இரண்டு பண்புகளும் அன்பின் வழி தோன்றுவதாகும். இன்சொல் பேசுபவர் இனிமையாக காட்சியளிப்பர், அன்பு கொண்டவர்இடம் சினம் தோன்றுவதில்லை. அன்பினால் உயர்வு தாழ்வு நீங்கி ஒற்றுமை வளரும் என்பதனை வள்ளுவர் கூறுகின்றார்.
அன்பே இன்பம்:
அன்பு, அருள், பொறுமை அம்மூன்றும் இன்றியமையாதன அன்பினால் ஆர்வமும் அதனால் நட்பு என்னும் செல்வமும் கிடைக்கும். உடலுக்கும் உயிருக்கும் அன்பே நெருங்கிய தொடர்புடையது.
"அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு"
என்ற குறட்பாவில் வள்ளுவர் உள்ளத்தில் அன்பு இல்லையென்றால் இந்த உடம்பு பயனற்ற எலும்புக்கூடு தான். ஒருவர் அன்போடு வாழவில்லை என்றால் அது உயிரற்ற வாழ்வு என குறிப்பிடுகிறார்.
அன்பையும் அறத்தையும் உடைய குடும்பம்:
ஒரு குடும்பத்தில் தலைவன் அறத்திற்ககும், மனைவி அன்பிற்கும் இலக்கணமாக செயல்படுகின்றனர். உணவு உடை உறைவிடம் ஆகியன குடும்ப வாழ்வை செம்மையாக வாழ்வதற்கு மூன்று அடிப்படைத் தேவைகளாகும். இவை அனைத்தையும் ஒருங்கே அமைத்துக் கொள்ள ஒரு மாளிகை தேவை, அந்த மாளிகை தான் குடும்பம் என புறநானூறும் உணர்த்துகிறது.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்"
என்ற குறட்பா வழியாக வள்ளுவரும் உரைக்கின்றார்.
அன்பால் ஆளுமை செய்தல்:
உறவினர் நினைத்தால் தும்பல் வரும் என்பது உலக வழக்கு. ஆனால் தலைவன் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் தலைவி, இல்வாழ்க்கையில் இருவரும் ஈடுபடும்போது தலைவனுக்குத் தும்மல் வந்தது, தலைவியோ இயல்பாக வாழ்க வாழ்க என வாழ்த்தினாள். பின்னர் தலைவி தான் அருகில் இருக்கும் போது வேறு யாவர் உன்னை நினைக்கின்றான் என தலைவி வருந்தினாள் என்பதை,
"வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று"
என்ற குறட்பா அன்பின் திறத்தை எடுத்துக் கூறுகின்றது.
அறமும் அன்பும்:
அறம் என்கிற அமைப்பு முறைக்கும், அன்பு சார்புடையது, அடிப்படையானது. மரத்தின் மற்றொரு கூறான வீர வாழ்க்கைக்கும் அன்பே துணையாக நிற்கும் என்பதனை,
"அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை"
என்ற குறட்பா வழி அறம் முழுமை கூறன்று, அது மரம் போன்றது பல கூறுகள் சேர்ந்தே ஒன்றே மரம்; அறமும் பல கூறுகள் சேர்ந்து ஒன்று, மரக்கூறுகளுள் சிறந்தது வேர்;
அறக்கூறுகளுள் சிறந்தது அன்பு, அறத்துக்கு வேர் போன்றது அன்பு என வள்ளுவர் கூறுகின்றார்.
முடிவுரை:
மனித வாழ்வின் வெற்றிக்கு அடிப்படை காரணம் அன்பு ஆகும். அன்பினை அனைவரிடமும் காட்ட வேண்டிய ஒன்று, அன்பு என்று வெள்ளத்தை எந்த தாப்பாள் போட்டு தடுத்து நிறுத்த முடியாது, உலகில் மக்கள் இன்பத்தோடு சிறப்பாக வாழ்வதற்கு காரணம் அன்பு ஆகும். இவ்வுலகில் மனிதர்கள் அனைவரும் அன்போடு வாழ்ந்தால் அவர்கள் அனைவரும் அனைத்து வகையான செல்வங்களை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ முடியும் என்பதனை இக்கட்டுரை வழியாக அறியமுடிகிறது.
Google search keywords:
Love thirukkural essay, deep personality of love thirukkural essay, kindness thirukkural essay, humanity Thirukkural essay, thirukkural relevance to social, social essays, thirukural social essays, TNPSC GROUP2 MAINS THIRUKKURAL ESSAY, அன்பின் ஆளுமை திருக்குறள் கட்டுரை, அன்புடைமை திருக்குறள் கட்டுரை, நட்பு திருக்குறள் கட்டுரை, நட்பாராய்தல் திருக்குறள் கட்டுரை, காதல் திருக்குறள் கட்டுரை, அன்பு சார்ந்த திருக்குறள் கட்டுரை, அன்றாட வாழ்வில் திருக்குறள் கட்டுரை, மானுட தாக்கம் திருக்குறள் கட்டுரை, சமூகம் சார்ந்த திருக்குறள் கட்டுரை, சமுதாயம் சார்ந்த திருக்குறள் கட்டுரை, மனிதநேயம் கட்டுரை, ஒழுக்கம் கட்டுரை
😊 super essay
ReplyDelete